துருக்கியில் இன்று ஒரே நாளில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது. இதனால் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் இன்று அதிகாலை முதல் 7.8 மற்றும் பிற்பகலில் 7.5 என்ற ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் பல கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
துருக்கியில் திங்கள் கிழமை இன்று (பிப். 6) முன்னிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பாசாரிக் என்ற நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவாகியது. அதனைத் தொடர்ந்து 10 மாகாணங்களில் உணரப்பட்ட இந்த நிலடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால், சிரியாவில் உள்நாட்டுப் போர் மற்றும் பிற மோதல்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் குடியேறியிருந்த துருக்கி நகரங்களின் முழுப் பகுதிகளும் சேதமடைந்தன.
இதுவரை சிரிய எல்லையில் மட்டும் 783 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் 1014 பேர் உயிரிழந்ததாக அதிபர் தையூப் எர்டோகான் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும், இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் கொடூரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 11 கிலோமீட்டர் ஆழத்திற்கு இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுவரை 2818 கட்டடங்கள் இடிந்துள்ளதாகவும், 2,470 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து 9 மணி நேரத்தில் 5,383 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.