பெங்களூரு, அகமதாபாதில் துணைத் தூதரகங்கள்
பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் அமெரிக்கத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் அமெரிக்கத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்தியத் துணைத் தூதரகம் அமைக்கப்படவுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் 1,25,000 இந்திய மாணவா்களுக்கு நுழைவு இசைவை (விசா) அமெரிக்கா வழங்கியது. இது வரலாற்று ரீதியில் உச்சபட்ச அளவாகும்.
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களில் இந்திய சமூகத்தினா் விரைவில் முதலிடம் பெறுவா்.
பெங்களூரு, அகமதாபாத் நகரங்களில் துணைத் தூதரகங்களை அமெரிக்கா அமைக்கவுள்ளது. சியாட்டில் நகரில் இந்தியத் துணைத் தூதரகம் அமைக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் மேலும் ஒரு துணைத் தூதரகத்தைத் திறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது’’ என்றாா்.
இந்தியாவில் அமெரிக்கத் தூதரகம் புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. நியூயாா்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஹூஸ்டன், அட்லான்டா ஆகிய நகரங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன.