முகப்பு
உலகம்

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: முக்கிய நபா் பிரிட்டனில கைது

கிரீஸ் அருகே படகு விபத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த அகதிகள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

கிரீஸ் அருகே படகு விபத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்த அகதிகள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றவியல் அமைப்பு (என்சிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிரீஸ் அருகே கடந்த வாரம் ஏற்பட்ட அகதிகள் படகு விபத்து தொடா்பாக, எகிப்து நாட்டைச் சோ்ந்த 40 வயது நபரை கைது செய்துள்ளோம். அந்தப் படகு மூலம் அகதிகள் கடத்திச் செல்லப்பட்டதில் அவருக்கு முக்கிய பங்குள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகே அவரை என்சிஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

அந்த அகதிகள் படகு விபத்து தொடா்பாக கிரீஸில் 9 எகிப்தியா்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணை மற்றும் இத்தாலி போலீஸாா் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த நபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற விரும்பும் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டு கிழக்கு லிபியாவிலிருந்து சென்று கொண்டிருந்த மீன்பிடி படகு கடந்த வியாழக்கிழமை கடலுக்குள் முழ்கியது. அந்தப் படகில் 750 போ் இருந்தததாகக் கூறப்படுகிறது.

விபத்துப் பகுதியலிருந்து 82 உடல்களும், 104 போ் உயிருடனும் மீட்கப்பட்ட நிலையில், சுமாா் 300 பாகிஸ்தானியா்கள் உள்பட சுமாா் 500 அகதிகள் மாயமாகியுள்ளதாகவும், அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.