பிரிட்டனில் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து சுவெல்லா பிரேவர்மேனைப் பிரதமர் ரிஷி சுனக் வெளியேற்றினார்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகக் காவல்துறையினர் மீது இவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இவர் மீது பரவலான கோபமும் அதிருப்தியும் நிலவியது.
அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை அவர் பதவியிலிருந்து விலகியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சுவெல்லாவை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சுனக்கிற்குக் கடும் நெருக்குதல்கள் இருந்தன.
கடந்த வாரம் வழக்கத்துக்கு மாறாக மிக மோசமான விதத்தில், லண்டன் காவல்துறையினர், 'பாலஸ்தீன ஆதரவு கும்பல்'களின் சட்ட மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பிரேவர்மன் குற்றம் சாட்டியிருந்தார். காஸாவில் சண்டை நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை 'வெறுப்புணர்வாளர்கள்' என்றும் குறிப்பிட்டார்.
லண்டனில் கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன ஆதரவுப் பேரணியின்போது, காவல்துறையினருடன் தீவிர வலதுசாரியினர் கைகலப்பில் ஈடுபட்டனர். பதற்றத்தை சுவெல்லா பிரேவர்மேன்தான் தூண்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.