ஐக்கிய அரபு நாடுகளில் மழை, வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி
பலத்த காற்று காரணமாக மிகச் சுறுசுறுப்பான துபை பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவை பாதிப்பு
துபை, ஐக்கிய அரபு நாடுகள்: ஐக்கிய அரபு நாடுகளில் மிகக் கடுமையான மழை பெய்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக துபையின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனிடையே, அருகிலுள்ள ஓமனில் மட்டும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.
இரவில் பெய்யத் தொடங்கிய மழை காரணமாக வீதிகளில் குளங்களைப் போல தண்ணீர் தேங்கி நின்றன. பலத்த காற்று காரணமாக உலகின் மிகச் சுறுசுறுப்பான விமான நிலையமான துபை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
வெள்ளம் நிரம்பிய சாலைகளின் வழியே அதிகாலையிலேயே காவல்துறையினரும் அவசரகாலப் பணியாளர்களும் செயல்படத் தொடங்கிவிட்டனர். புயல் மழையைக் கருத்தில்கொண்டு, ஐக்கிய அரபு நாடுகளின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
Advertisement
அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாறு பணிகளை மேற்கொண்டனர். வெளியே சென்ற பலருடைய வாகனங்கள் சாலைகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.
அரேபிய வளைகுடா பகுதியிலுள்ள ஐக்கிய அரபு நாடுகளில் மழை பெய்வது மிகவும் குறைவே. ஆனால், குளிர்கால மாதங்களில் அவ்வப்போது பெய்யும். இதனால் பல சாலைகளில் சரியான வடிகால் ஏற்பாடுகள் இல்லை. இதனால் கன மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு நேரிட்டு விடுகிறது.
பஹ்ரைன், கத்தார், சௌதி அரேபியா ஆகியவற்றில் மழை பெய்தது.
அருகிலுள்ள ஓமனில் கடந்த சில நாள்களாகப் பெய்யும் மழையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவார்கள்.