அமீரகத்தில் கனமழை: சென்னையில் 5 விமானங்கள் ரத்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து அந்நாட்டுக்கு இயக்கப்படும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களின் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.
இதனால், சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டு வருகின்றது.
மேலும், உலகின் மிகச் சுறுசுறுப்பான விமான நிலையமாக கருதப்படும் துபை விமான நிலையத்தின் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து துபை உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாட்டுக்கு இயக்கப்படும் 5 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.