வங்கதேசத்தில் இடைக்கால அரசு: தலைமைப் பொறுப்பேற்றார் முகமது யூனுஸ்!
வங்கதேசம்: இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் இன்றிரவு பொறுப்பேற்பு
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இன்றிரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் போராட்ட அமைப்புகள்,நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
Advertisement
Advertisement
பதவியேற்புக்காக துபாயில் இருந்து இன்று பிற்பகல் டாக்கா வந்த முகமது யூனுஸை ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான், மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பேராசிரியர் முகமது யூனுஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாவும், வங்கதேசத்தில் இயல்பு நிலை விரைவில் திரும்புமென நம்புவதாகவும், அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் முகமது யூனுஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாவும், அங்கு அமைதியும் இயல்பு நிலை திரும்புதலே இப்போதையை உடனடி தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு இணையான ‘தலைமை ஆலோசகர்’ என்ற பொறுப்பை முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது தலைமையிலான, இடைக்கால அரசுக்கு உதவியாக 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசகர்கள் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான நஹீது இஸ்லாமும், ஆசிப் மகமூத்தும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.