கனடா: ஒரே வாரத்தில் 2 இந்தியர்கள் கொலை!
ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் எட்மண்டனில் வெள்ளிக்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணியளவில் 107-வது அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ஹர்ஷன்தீப் சிங் (20) என்பவரை இருவர் தாக்கியுள்ளனர். மேலும், ஹர்ஷன்தீப்பை துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹர்ஷன்தீப்புக்கு முதலுதவி செய்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்; இருப்பினும், ஹர்ஷன்தீப் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: நக்ஸல்கள் அட்டூழியம்: பெண் கழுத்தறுத்துக் கொலை!
இந்த நிலையில், ஹர்ஷன்தீப் மீது தாக்குதல் நடத்திய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை; கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹர்ஷன்தீப்பை படிக்கட்டில் தள்ளி, பின்னிருந்து அவரின் முதுகில் துப்பாக்கில் சுடும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக, கனடாவில் டிசம்பர் 1 ஆம் தேதியில் வணிக மேலாண்மையில் முதலாண்டு படித்து வந்த குராஸிஸ் சிங் (22) என்பவருக்கும், அவருடன் ஒன்றாக வசித்து வந்த கிராஸ்லி ஹண்டருக்கும் இடையிலான வாக்குவாதத்தில், குராஸிஸ் சிங் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, கனடாவில் தங்கியிருக்கும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.