உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் மீது பிபிசி செய்தி நிறுவனம் புகாரளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழிநுட்பமான ’ஆப்பிள் இன்டலிஜென்ஸ்’ வசதியை சில நாள்களுக்கு முன்பு பிரிட்டனில் அறிமுகப்படுத்தியது. இதில், பல தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகளை ஏஐ மூலம் அறிவிப்பாகத் (நோட்டிஃபிகேசன்) தயாரித்து வெளியிடும் வசதி உள்ளது.
அதில் பிபிசி தளத்தின் செய்தி எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் ப்ரையன் தாம்ப்ஸனை கொன்ற வழக்கில் கைதான லூகி மேங்கியோன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியிட்டது.
இது பொய்யானத் தகவலாகும். இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்திடம் இந்தச் செய்தி குறித்து பிபிசி நிறுவனம் புகார் தெரிவித்தது.
இதுதொடர்பாக பிபிசி செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “பிபிசி நிறுவனம் உலகின் மிகவும் நம்பத்தகுந்த செய்தி நிறுவனமாகும். எங்கள் பெயரில் வெளியாகும் எந்தச் செய்தி அல்லது அறிவிப்பை எங்களின் பார்வையாளர்கள் நம்புவார்கள். மேலும், அந்த நம்பகத்தன்மை எங்களுக்கு முக்கியமாகும். இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் நாங்கள் புகாரளித்துள்ளோம். மேலும், இதனைச் சரிசெய்யவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி நிறுவனம் மட்டுமின்றி நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தின் செய்தி என்ற பெயரில் வெளியிட்ட அறிவிப்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.