சர்வதேச சட்டத்தை நினைவுபடுத்தும் பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு!
ஆறு வயது சிறுமியை மீட்கச் சென்ற தங்களது மீட்புக் குழு தொலைந்துபோன நிலையில், போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய சர்வதேச சட்டத்தை செஞ்சிலுவை அமைப்பு நினைவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் பயங்கரமான போரில் பாலஸ்தீன மக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு ஆதரவினையும், மருத்துவ உதவிகளையும் பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு செய்துவருகிறது. காஸாவிற்குள் அவ்வப்போது நுழையும் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடைய முடிந்த உதவிகளைச் செய்துவருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஹிந்த் எனும் 6 வயது சிறுமியைக் காப்பாற்றுவதற்காக அவசர ஊர்தியில் விரைந்த அகமது, யூசுப் எனும் செஞ்சிலுவை அமைப்பின் பணியாளர்கள் காணாமல் போனதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தது.
இஸ்ரேல் ராணுவத்தால் அவர்கள் பிடிக்கப்பட்டோ, தாக்கப்பட்டோ இருக்கலாம் என சந்தேகிக்கும் சூழல்கள் அங்கு நிலவிவரும் நிலையில், முக்கிய சர்வதேச சட்டத்தை நினைவூட்டும் பதிவு ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் முடிவு விரைவில் தெரியவரும்!
அதில் 'பொதுமக்கள், துப்புறவு பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவியாளர்களைப் போரில் பாதுகாக்க வேண்டும் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் வலியிறுத்துகிறது' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், 89 மணிநேரத்திற்குப் பின்னும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆறு வயது குழந்தையும், எங்களது பணியாளர்களும் என்ன ஆனார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
27,000த்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ள இஸ்ரேல், தொடர் போர் குற்றங்களைச் செய்துவருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் யாருக்கும் இஸ்ரேல் செவி சாய்ப்பதாக இல்லை. தனது தாக்குதல்களால் தினமும் நூற்றுக்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்கிறது.