உலகின் பல்லுயிர்தன்மையை பாதிக்கும் உணவுகள் பட்டியலில் இந்தியாவின் பிரபல உணவான இட்லி, தோசை போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் சன்னா மசாலா, ராஜ்மா ஆகிய இந்திய உணவு வகைகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகின் பிரபலமான 151 உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், உலகின் பல்லுயிர்தன்மையை மனிதர்களின் உணவுப்பழக்கங்கள் வெகுவாகப் பாதிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
உண்ணும் உணவு எப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் எண்ணலாம், அதற்கு பல காரணங்களை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர்.
பொதுவாக இறைச்சி உண்ணுவதால் அதிக பல்லுயிதன்மை பாதிப்பு ஏற்படுகிறது. மாடு போன்ற விலங்குகளை வெட்டும்போது வெளியாகும் வளிமண்டல மீத்தேன்கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறுகின்றனர்.
ஒரு உணவை உற்பத்தி செய்ய அழிக்கப்படும் பறவை மற்றும் பூச்சியினங்களும் பல்லுயிர்தன்மையைப் பாதிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனடிப்படையில் ஒரு உணவைத் தயாரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
'அரிசி மற்றும் பருப்புகளின் மிகப்பெரிய உற்பத்தியாளரான இந்தியாவிலும் பல்லுயிர் தன்மை பெரிதாகப் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் யோசித்துப்பார்க்கையில் தெளிவாய் புரிகிறது' என இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் லூயிஸ் ரோமன் கராசோ கூறுகிறார்.
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இட்லியும், 7ஆவது இடத்தில் ராஜ்மாவும், 20ஆவது இடத்தில் தாலும், 22ஆவது இடத்தில் சன்னா மசாலாவும், 96 ஆவது இடத்தில் ஆலு பரோட்டாவும், 103 ஆவது இடத்தில் தோசையும் இடம்பெற்றுள்ளன.
ஆச்சரியப்படும் விதமாக உருளைக்கிழங்கு பொரியலான ப்ரெஞ் பிரைஸ் (French fries) கடைசி இடத்தைப் பெற்று உலகின் பல்லுயிர் தன்மைக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் உணவாக இடம்பெற்றுள்ளது.