இனப் படுகொலையாளனா இஸ்ரேல்? அமெரிக்காவின் கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?
இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா? என்ற கேள்விக்கு அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என இந்த கருத்துக் கணிப்பு விளக்குகிறது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை சமீபத்திய கருத்துக்கணிப்பு விளக்கியுள்ளது.
யூகவ் (YouGov) எனும் இணைய அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் ஈடுபடும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்கள் பங்குபெற்றனர்.
அதில் கிடைத்த தரவுகளின்படி 35 சதவீத அமெரிக்கர்கள், இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்கிறார்கள். 36 சதவீத மக்கள் இது இனப்படுகொலையல்ல என்கிறார்கள். 29 சதவீதம், இரண்டுக்கும் நடுவில் முடிவெடுக்க முடியவில்லை என்கிறார்கள்.
Advertisement
18-29 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 49 சதவீதம் பேர் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதாகக் கூறியுள்ளனர். 24 சதவீதம், இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிலளித்துள்ளனர். 27 சதவீதம் முடிவெடுக்க முடியவில்லை என்கிறார்கள்.
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல், தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டை எதிர்த்துள்ளது. தினமும் பெண்கள், குழந்தைகள் என அனைத்து பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து, பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்கள், குடியிருப்புப் பகுதிகள் என அனைத்தையும் அழித்து, சண்டையில் சொந்த நாட்டு பிணைக்கைதிகள் இறக்கும் அவலங்கள் நடந்தும் போரை நிறுத்திடாத இஸ்ரேல் தான் இனப்படுகொலையாளன் இல்லை என தொடர்ந்து வாதாடுகிறது.