மருத்துவப் பணியாளர்கள் வேடத்தில் இஸ்ரேல் ராணுவம்! 3 பேர் கொலை!
மருத்துவப் பணியாளர்களைப் போல வேடமிட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதத்திற்கும் மேலாக நடந்துவருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள்.
மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மருத்துவ ஊழியர்கள் போல வேடமிட்டு மூன்று பேரைக் கொலை செய்துள்ளனர். பாலஸ்தீனப் பெண்ணைப் போன்றும், மருத்துவப் பணியாளர்கள் போன்றும் வேடமணிந்து மருத்துவமனைக்குள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பாலஸ்தீன சுகாதார அமைச்சரகம் கண்டித்துள்ளது. மேலும் சர்வதேச அமைப்புகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தக்கோரியுள்ளது.
இதையும் படிக்க: ஹமாஸ் கோரிக்கைகளை மறுத்த நெதன்யாகு: பேச்சுவார்த்தை முடங்கியதா?
இதுகுறித்து தங்கள் கருத்தை தெரிவித்த ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அந்த மருத்துவமனைக்குள் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை.
மருத்துவமனை சிசிடிவி காணொலிகளில் பதிவான இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மூவரும் தூங்கிக்கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாகவும், அவர்கள் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.