நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு
நைஜீரியாவில் பெண்கள் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
மைடுகுரி: நைஜீரியாவில் பெண்கள் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சோ்ந்த போா்னோ மாகாணம், குவோஸா நகரில் திருமணம், இறுதிச் சடங்கு நடைபெற்ற இடங்கள் மற்றும் மருத்துவமனையிலும் சனிக்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், ஏற்கெனவே பலமுறை பெண்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தியுள்ள போகோ ஹராம் பயங்கரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
Advertisement
தாக்குதலில் ஈடுபட்ட 3 பெண்களில் ஒருவா், கைக்குழந்தையுடன் உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை கூட்டத்தினரிடையே வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
போா்னோ மகாணத்தில் 2009-ஆம் ஆண்டு முதல் தலைவிரித்தாடிய போகோ ஹராம் பயங்கரவாதத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்; 20 லட்சம் போ் இருப்பிடங்களை விட்டு வெளியேறினா்.
அந்த பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குவோஸா நகரை பாதுகாப்புப் படையினா் கடந்த 2014-ஆம் ஆண்டு மீட்டதற்குப் பிறகு பயங்கரவாதம் தணிந்தாலும், அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன.