சமூக ஊடகங்களுக்குத் தடை? : பாகிஸ்தான் அரசு
சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டி பாகிஸ்தானில் மாநில அரசு கோரிக்கை
பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகையையொட்டி சமூக ஊடகங்களைத் தடைசெய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி முதல் சமூக ஊடகமான எக்ஸ் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மொஹரம் பண்டிகையையொட்டி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஜூலை 13 முதல் 18 வரையிலான ஆறு நாள்களுக்கு தடை விதிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையிலான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரவைக் குழு யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களையும் தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.
120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பஞ்சாப் மாகாணத்தில் வகுப்புவாத வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும், வெறுக்கத்தக்க மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தவும் பஞ்சாப் அரசு நேற்று (ஜூலை 04) பாகிஸ்தானின் மத்திய அரசை வற்புறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகிய இருவரும் சமூக ஊடகத் தளங்களுக்கு முற்றிலுமாக நிரந்தரத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.