முகப்பு
உலகம்

கேரளத்து செவிலியர் பிரிட்டன் எம்.பி.யான சுவாரசியம்..!

முன்பு கேரளத்து செவிலியர்; இப்போது பிரிட்டன் எம்.பி.!

Updated On : 7 ஜூலை, 2024 at 1:11 PM
தொழிலாளா் கட்சியினருடன் கை குலுக்கும் சோஜன் ஜோசஃப்(இடமிருந்து முதலில் நிற்பவர்)
பகிர்:

பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் புதிய பிரதமராகியுள்ளாா். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளா் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

பிரிட்டன் பொதுத் தோ்தலில் சுவாரசியமாக, மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளா்கள் போட்டியிட்டதில், 28 போ் வெற்றிபெற்றுள்ளனா்.

தொழிலாளா் கட்சி சாா்பில் தென்கிழக்கு பிரிட்டனின் ஆஷ்போர்டு தொதியில் போட்டியிட்ட கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட சோஜன் ஜோசஃப், இத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டேமியன் க்ரீன் மற்றும் டோரி ஸ்டால்வார்ட் ஆகிய இருவரையும் விட கூடுதல் வாக்குகளைப் பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.

கேரளத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சோஜன் ஜோசஃப், பெங்களூரில் உள்ள பி. ஆர். அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை செவிலியர் பட்டம் பெற்றவர்.

22 ஆண்டுகளுக்கு முன், கேரளத்திலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர், அங்கு சுகாதாரத்துறை பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.தனது மனைவி, 3 குழந்தைகளுடன் ஆஷ்போர்டு பகுதியில் வசித்து வரும் இவர், அப்பகுதி மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார்.

தனது குடும்பத்தினருடன் ஆஷ்போர்டு எம்.பி. சோஜன் ஜோசஃப்

20 ஆண்டுகளுக்கும் மேலாக மனநல மருத்துவப் பிரிவில் செவிலியராக சேவையாற்றிய இவர், உள்ளூர் கவுன்சிலர் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சோஜன் ஜோசஃப் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஆஷ்போர்டு தொகுதியில் பல ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது பணி அணுபவம் மக்களின் பிரச்னைகளை அவர்களது கோணத்திலிருந்து புரிந்துகொள்ள உதவியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

சோஜன் ஜோசஃப் வெற்றியை அவரது சொந்த ஊரான கோட்டயம் அருகே அமைந்துள்ள ஓணம்துருத் கிராமத்திலுள்ள அவரது பூர்வீக இல்லத்தில் அவரது தந்தையுடன் சேர்ந்து உறவினர்களும் நண்பர்களும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →