இறையாண்மை பாதுகாப்பதில் மாலத்தீவுக்கு ஆதரவு: சீனா
பெய்ஜிங்: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியுள்ள சூழலில், ‘தங்களின் இறையாண்மையை பாதுகாப்பதில் மாலத்தீவுக்கு ஆதரவு அளிப்போம்’ என சீனா தெரிவித்துள்ளது.
மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்தியா வழங்கிய 2 ஹெலிகாப்டா்கள், ஒரு சிறிய ரக விமானம் ஆகியவற்றை பராமரித்து, இயக்கும் பணிகளில் சுமாா் 90 இந்திய ராணுவ வீரா்கள் அந்த நாட்டில் ஈடுபட்டு வந்தனா். மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான புதிய மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா்.
இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தைத் தொடா்ந்து, நிகழாண்டு மே மாதத்துக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது.
Advertisement
அதேவேளையில், அந்தப் பணிகளுக்கு ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை இந்திய அரசு அனுப்புவதற்கு மாலத்தீவு ஒப்புக்கொண்டது. அதன்படி, 26 போ் அடங்கிய குழு மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் திங்கள்கிழமை தெரிவித்தது. இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் அளித்த பதிலில், ‘இவ்விவகாரம் குறித்து முழுமையாக அறியவில்லை. ஆனால், இறையாண்மையை பாதுகாப்பதிலும் சமத்துவத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மாலத்தீவுக்கு சீனா ஆதரவளிக்கிறது’ என்றாா்.