அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிக்கோவுக்கு பல மணி நேரம் நடத்தப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராபர்ட் ஃபிக்கோவின் உடல்நிலை அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தாமஸ் தராபா தெரிவித்துள்ளார்.
நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன், தற்போதுவரை அவருக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர் உயிர்பிழைப்பார் என்று நம்புகிறேன், தற்போதைய நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று தெரிகிறது என்றார் தராபா.
ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது வயிற்றைத்துளைத்துவிட்டது, மற்றொன்று மூட்டுப் பகுதியை தாக்கியிருக்கிறது.
அறுவைசிகிச்சை நடக்கும் போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 59 வயதாகும் அவர் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து டிஏ3 தொலைக்காட்சி கூறியதாவது, தலைநகர் ப்ராகுக்கு 150 கி.மீ. தொலைவிலுள்ள ஹாண்ட் லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒருவர் 4 முறை துப்பாக்கியால் சுட்டார். அவரது பாதுகாவலர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.