நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்
நாங்கள் காரணம் அல்ல என்று ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரய்சி பலியான சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நேற்று நிகழ்ந்த இந்த ஹெலிகாப்டர் விபத்தில், இப்ராஹிம் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்ராஹிம் ரய்சியுடன் பயணித்த அவரது அரசின் முக்கிய அதிகாரிகள் உள்பட பலரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் அதிபர் மரணமடைந்த ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருக்குமா? இருக்கலாம்? என பல்வேறு தரப்பிலான பேச்சுகள் எழுந்திருக்கும் நிலையில், அதில் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இஸ்ரேல் விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆனால், யார் இந்த விளக்கத்தைக் கொடுத்தார்கள், எப்போது கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.
இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இப்ராஹிம் ரய்சி மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் டிரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் மூலம் இப்ராஹிம் ரய்சி வந்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுபோன்ற யூகங்கள் வெளியான நிலையில்தான் இஸ்ரேல் தாமாக இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.