நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!
குடியுரிமை சட்ட மீறல் காரணமாக கைது!
நேபாளத்தின் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தின் தலைவர், குடியுரிமை அடையாள அட்டை விவகாரத்தில் நாட்டின் குடியுரிமை சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கைலாஷ் சிரோஹியா தெற்கு நேபாளத்தில் உள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
காண்டிபூர் பதிப்பகத்தின் காத்மண்டு அலுவலகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த பதிப்பகம் நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, மாத இதழ்கள் மற்றும் இணையத்தளத்தையும் நடத்திவருகிறது.
சிரோஹியா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதுடன் உள்துறை அமைச்சர் ரபி லாமிச்சானே பண மோசடியில் ஈடுபட்டது குறித்த கட்டுரையை வெளியிட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சரை கைது செய்யவும் அவர் பதவி விலகக் கோரியும் போராடி வருகின்றன.
சிரோஹியாவின் அடையாள அட்டையின் எண்ணிலேயே மற்றொருவருக்கும் அடையாள அட்டை உள்ளதாகவும் அது நாட்டின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் வயதுவந்தோருக்கான அடையாள அட்டையாக இந்த குடியுரிமை அட்டை வழங்கப்படுகிறது.
முன்னர் பலர் போலியான அடையாள அட்டைகளை தயாரித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவின் எல்லையையொட்டியுள்ள தெற்கு நேபாளத்தில் அவை அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.