லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளார்.
லெபனான் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்கள், நூற்றுக்கணக்கான வாக்கிடாக்கிகள் கடந்த செப்டம்பர் மாதம் வெடித்துச் சிதறின.
பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள், வீதிகள் எனப் பொதுமக்கள் அதிகம் இருந்த பகுதிகளில் ஹில்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்துச் சிதறியதில், 40 பேர் பலியாகினர், 3,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் படையினர் தொடர் குண்டுவீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு, தரைவழித் தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இந்த பேஜர்கள் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் அரசு இருப்பதாக லெபனான் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஓமர் தோஸ்திரி, இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேஜர்கள் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததை இஸ்ரேல் பிரதமர் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
3,000 பேர் பலி
லெபனான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 2023 முதல் ஹில்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், லெபனானில் 3,000 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலாண்டை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதாக கடந்த வாரம் நெதன்யாகு தெரிவித்தார்.
காஸா போர் தொடங்கியபோது அவர் மீது இருந்த நம்பிக்கை தற்போது இல்லை என்றும், அமைச்சரவை முடிவுக்கு முரணாக செயல்படுவதாகவும் கலாண்ட் மீது நெதன்யாகு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸை பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.