இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இத்தாலி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் போர்ப் பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாக பைடன் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம்
ஈரானின் ஆதரவு பெற்ற காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் தலைவர்களை கொன்றது.
இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது.
ஜி7 தலைவர்கள் ஆலோசனை
ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பைடன் முக்கிய ஆலோசனையில் புதன்கிழமை ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
“இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும், ஈரானுக்கு புதிய தடைகள் விதிப்பது பற்றியும் நடந்த ஜி7 தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று(புதன்கிழமை) காலை பங்கேற்றேன்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்புக் கவசமாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் படைகள் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். ரோந்துப் பணி மேற்கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பினரை தேடி வருகின்றனர்.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.