ஜோஹன்னஸ்பர்க்: வெள்ளை இன உரிமையாளரால் நடத்தப்படும் பண்ணைக்குள் காலாவதியான பொருள்களை கொட்ட டிரக் ஒன்று வந்து சென்றதைப் பார்த்த கறுப்பின பெண்கள், அத்துமீறி அதற்குள் நுழைந்து சென்ற நிலையில், அவர்கள் திரும்ப வரவேயில்லை.
தென்னாப்ரிக்காவில் அமைந்துள்ள வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாருக்கும் தெரியாமல் செல்வதுண்டு. ஆனால் அதுபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சென்ற இரண்டு கறுப்பின பெண்கள் திரும்ப வரவேயில்லை.
மரியா (44) மற்றும் லொகாடியா (35) இருவரும் அந்தப் பண்ணைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய சோதனையில், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்களையும் சுட்டுக்கொன்று, அவர்களது உடல்களை வெட்டி பன்றிக்கு உணவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு ஜோஹன்னஸ்பர்க்கின் லிம்போபோ மாகாணத்தில், நடந்த இந்த சம்பவம், நாட்டின் வெகு காலமாக நிலவும் இனவாத, பாலின பாகுபாட்டின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுநாள்வரை, இனம் மற்றும் பாலின அடிப்படையில் நடக்கும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு மோதல்களின் கொடூர முகத்தை தோலுரித்துக்காட்டியிருக்கிறது.
காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று பேர் மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையின்போது, அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பழைய கெட்டுப்போன பொருள்களை ஒரு டிரக்கில் கொண்டுவந்து பண்ணைக்குள் கொட்டிவிட்டுச் சென்றதையடுத்து, இந்த பெண்கள் அங்கு உணவுத் தேடி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், தெரிய வந்துள்ளது.
இது குறித்து கொல்லப்பட்ட பெண்ணின் மகன் ராண்டி கூறுகையில், தனது தாயின் வாழ்வு இவ்வளவு கொடூரமாக முடியும் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. தனது நான்கு குழந்தைகளுக்கும் பசியாற்ற ஏதாவது கிடைக்காதா என்று தேடித்தான் தனது தாய் அந்த பண்ணைக்குச் சென்றிருப்பார் என்றும் அவர் கண் கலங்கியபடி கூறுகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது, நீதிமன்ற வாயிலில், ஏராளமான கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.