காஸா, லெபனானில் இஸ்ரேல் குண்டு மழை! 8 பேர் பலி
காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து முயற்சி: மறுபுறம், இஸ்ரேல் தொடர் தாக்குதல்
காஸாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென எகிப்து அரசு முன்மொழிந்துள்ள நிலையில், அதனை நிராகரிக்கும் விதமாக காஸாவில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸா, லெபனானில் இன்று(அக். 28) இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் துறைமுக நகரமான ‘டையர்’ நகரத்தில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டையர் நகரம் மீதான இஸ்ரேலின் குண்டுமழையில், அங்குள்ள குடியிருப்பு வளாகம் ஒன்று முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், மீட்புப் பணிகள் தொடருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் இதுவரை, லெபனானில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும், உயிரிழப்பு எண்ணிக்கை இந்த தரவுகளைவிட அதிகமாகவே இருக்கும் என்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
காஸா நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?
இந்த நிலையில், ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் முக்கியமாக, ஈரான் மீது சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.