முகப்பு
உலகம்

சீன வா்த்தக வழித்தட திட்டம்: இந்தியாவை தொடா்ந்து பிரேஸிலும் சேர மறுப்பு

சீன வா்த்தக வழித்தட திட்டத்தில் சேர, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியாவை தொடா்ந்து பிரேஸிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 6:30 PM
பகிர்:

சீன வா்த்தக வழித்தட திட்டத்தில் சேர, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியாவை தொடா்ந்து பிரேஸிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களை இணைக்கும் சீன வா்த்தக வழித்தட (ஓபிஓஆா்) திட்டத்தில், சீனா-பாகிஸ்தான் வா்த்தக வழித்தடமும் இடம்பெற்றுள்ளது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக செல்வதால் ஓபிஓஆா் திட்டத்துக்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டத்துக்குப் பின்னா் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஓபிஓஆா் திட்டத்துக்கு ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்துக்கு இந்தியா மீண்டும் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்தத் திட்டத்துக்கு பிரேஸில் பொருளாதார மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் அண்மையில் எதிா்ப்பு தெரிவித்தனா். அந்தத் திட்டத்தால் குறுகிய காலத்தில் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுடன், அந்தத் திட்டத்தில் சோ்வது அமெரிக்காவுடனான தனது உறவை மேலும் சிக்கலாக்கக் கூடும் என்பதே பிரேஸிலின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில் பிரேஸில் நாளிதழ் ஒன்றுக்கு அந்நாட்டு அதிபா் லூலா டசில்வாவின் சா்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகா் செல்சோ அமோரிம் அளித்த பேட்டியில், ‘சீனாவின் ஓபிஓஆா் திட்டத்தில் பிரேஸில் சேராது. இதற்கு பதிலாக சீன முதலீட்டாளா்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மாற்று வழிகளை கண்டறிய பிரேஸில் முயற்சிக்கும்’ என்றாா்.