டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!
டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடரந்திருப்பது பற்றி...
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சேர்க்கை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் கடிதம் எழுதியிருந்தது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத்தன்மை கருத்துகள் கூடாது, மாணவ சங்கங்களை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தது.
Advertisement
இதையடுத்து, டிரம்ப் அரசின் உத்தரவுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் அறிவித்த சில மணிநேரங்களில், பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், பாஸ்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட நிதி முடக்கத்தை நிறுத்தக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெள்ளை மாளிகை, “வரி செலுத்துவோரின் நிதியைப் பெறுவதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய ஹார்வர்டு பல்கலைக்கழகம் தவறிவிட்டது” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.