டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..
டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீது போர் நிறுத்தத்துக்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனல், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஒன்றுபோல இரு தலைவர்களும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பதை மட்டுமே அறிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய நாடுகளாக இருக்கும் அமெரிக்க - ரஷிய அதிபர்கள் ஒன்றாக சந்தித்துப் பேசிக்கொண்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசும்போது இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டே, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே தெரிவித்திருந்தனர்.
Advertisement
இந்த சந்திப்புக்குப் பின் இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் கூட்டத்தில் நடந்த விவகாரங்கள் குறித்து அவர்களது அறிக்கைகைளை வாசித்துவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டனர்.
அதிபர்கள் பதிலளிக்காத நிலையில், இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களும் செய்தியாளர்களை புறக்கணித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறும் என்று அறிவித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஸ்கோ வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்திருந்தார்.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் பேச்சுவார்த்தை, மிகவும் அரிதிலும் அரிதாக நடந்திருந்த போதிலும், எந்த முக்கிய முடிவுகளும் எட்டப்படாமல் போயிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
Trump leaves Alaska summit with Putin empty-handed after failing to reach a deal to end Ukraine war
இதையும் படிக்க.. சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!