பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆசிம் முனீர், “நான் ஒரு ராணுவ வீரன், வீர மரணமடைவதே எமது பெரும் விருப்பம். அதைத்தவிர வேறெந்த பதவியும் எனக்கு தேவையில்லை” என்றார்.
பாகிஸ்தானின் அதிபரையும் பிரதமரையும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக வதந்தி பரவி வரும் நிலையில், ஆசிம் முனீரின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்கண்ட வதந்திகள் அனைத்து முற்றிலும் தவறானவை என்று ஆசிம் முனீர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தலிபான்களை பாகிஸ்தானுக்குள் ஊடுருவச் செய்யும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளுக்கும், இந்தியாவின் சில நடவடிக்கைகளுக்கும் அவர் இரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
“ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கருணையுடன் சாதகமான நடவடிக்கைகள் பலவற்றை கடந்த ஆண்டுகளில் செய்திருந்தபோதிலும், அதற்கு பிரதிபலனாக இந்தியாவுடன் கைகோத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதித்திட்டம் தீட்டுவதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
”பாகிஸ்தானில் உள்ள கனிம வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் உலகின் வளமான சமூகங்களில் ஒன்றாக பாகிஸ்தானை மாற்றுவோம் என்றும், பாகிஸ்தானின் கடன் சுமையும் இதனால் குறையும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, “அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தானின் நட்புறவு தொடரும் என்றும், இவர்களில் ஒருவரைப் பகைத்துக்கொண்டு இன்னொருவரை விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.