பாகிஸ்தான் அதிபர் பதவி விலகல்? உள்துறை அமைச்சர் விளக்கம்!
பாகிஸ்தான் அதிபர் பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பதிலளித்துள்ளார்.
பாகிஸ்தானின் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பதவி விலகுவதாகவும், அவருக்கு பதிலாக அந்நாட்டின் ராணுவ ஃபீள்ட் மார்ஷல் அசீம் முனிர் அதிபராகப் போவதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி என நிராகரித்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி; பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அதிபர் ஜர்தாரி ஆகியோரைக் குறிவைத்து இத்தகைய பிரச்சாரத்தை யார் செய்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது:
“நான் பட்டியலிட்டு கூறியிருக்கின்றேன், அதிபரை பதவி விலகக் கேட்பது குறித்து, எந்தவொரு உரையாடலோ அல்லது சிந்தனையோ இல்லை. அவர், ராணுவ தலைவர்களுடன் வலுவான மற்றும் மரியாதைக்குரிய உறவுகளையே கொண்டுள்ளார்.
இந்தப் பொய்யான தகவல்களை பரப்பும் அனைவரும், வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உங்கள் விருப்பம்போல் செயல்படுங்கள். எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானை மீண்டும் வலுவாக்க என்ன தேவையோ அதை நாங்கள் செய்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை யார் பரப்புகிறார்கள், ஏன் பரப்புகிறார்கள், இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என அனைத்தும் தனக்குத் தெரியும் என்று அதிபர் ஜர்தாரி கூறியதாக, அமைச்சர் நக்வி மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு அசீம் முனீர் 3 ஆண்டுகாலத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவராகப் பதவி உயர்த்தப்பட்டார். ஆனால், கடந்த 2024-ல் அவரது பதவிகாலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.