முகப்பு
உலகம்

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

21 வாரங்களில் 280 கிராமுடன் பிறந்த குழந்தை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தள்ளது.

Updated On : 26 ஜூலை 2025, 12:42 pm IST
நாஷ் கீன் - Liz Martin - ASSOCIATED PRESS
பகிர்:

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி 21 வாரங்களில், அதாவது பிரசவ தேதிக்கு 133 நாள்கள் முன்னதாக, வெறும் 283 கிராம் உடல் எடையுடன் பிறந்த குழந்தை நாஷ் கீன், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லோவா அருகே அன்கெனியைச் சேர்ந்த நாஷ் கீன் என்று பெயரிடப்பட்டிருக்கும், இந்தக் குழந்தைதான், உலகிலேயே மிகக் குறைந்த வாரங்களில் அதாவது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

நாஷ் போடாடோ என்று அவரை அவரது குடும்பத்தினர் செல்லமாக அழைக்கிறார்கள். பிறந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை வைக்கப்பட்டு, வழக்கமான குழந்தைகளின் உடல் எடையை அடையும் வரை தீவிர கண்காணிப்புடன் கவனிக்கப்பட்டு வந்தது.

அவன் இன்குபேட்டரில் இருந்தபோது இன்னும் பலவீனமாகவும் மோசமாகவும் இருந்திருப்பான்னு பலரும் நினைக்கலாம். ஆனால் அவன் அப்படி இல்லை. அவன் ரொம்ப உறுதியாக இருந்தான், மிகவும் துறுதுறுவென்று மிகக் குட்டியாக அழாமல், சிரித்துக்கொண்டே இருந்தான் என்று அவரது அம்மா பதிவிட்டிருக்கிறார்.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், கருவுற்று 20வது வாரம் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தபோதுதான், கருப்பை வாய் திறந்து, குழந்தைப் பிறக்கத்தயாராக இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. குழந்தை தனது தாயின் கருப்பையை விட அதிக நாள்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு, குறைப் பிரசவத்தில் பிறந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்த குழந்தையை விட ஒரு நாள்கள் முன்கூட்டியே பிறந்து அதாவது வெறும் 147 நாள்களில் பிறந்து, நாஷ் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டார்.

பிறக்கும் குழந்தைக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் இருக்கும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அனைத்துத் தடைகளையும் உடைத்து, குழந்தை நாளுக்கு நாள் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காட்டியது. மருத்துவர்களும் பதற்றமடையாமல் சிகிச்சையளித்து வந்தனர். அனைத்துமே சாதகமாக சென்றது. குழந்தையும் இவர்களால் பலம்பெற்றது என்கிறார் அவரது தாய்.

மனிதர்களின் உள்ளங்கையை விடவும் சிறிய உருவத்தில் வெறும் 280 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை, இப்பெற்றோருக்கு சில கருச்சிதைவுகளைத் தொடர்ந்து பிறந்தது என்பதால், அவர்களுக்கு பொக்கிஷமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.