இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!
ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொல்லப்பட்டது பற்றி...
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறிவைத்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
Advertisement
ஈரான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் முகமது பகேரி, ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லபட்டதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில், ஈரான் முப்படை தலைமைத் தளபதி, ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர், ஈரானின் அவசரகால கட்டளை மையத் தலைவர் உள்ளிட்ட மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இவர்களை கொல்ல 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவு குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.