முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்! 16 வீரர்கள் கொலை!

தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு பொறுப்பேற்பு...

Updated On : 28 ஜூன் 2025, 3:38 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டிற்குள் செயல்படும் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கைபர் பக்துன்குவாவின், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், இன்று (ஜூன் 28) வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலைப் படையின் பயங்கரவாதி ஒருவர், ராணுவ பேரணியில் மோதி குண்டுகளை வெடிக்கச் செயததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்துடன், இந்தத் தாக்குதலில் அப்பகுதியிலுள்ள 2 வீடுகள் இடிந்ததால், 6 குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவான ஹஃபிஸ் குல் பஹதூர் எனும் ஆயுதப் படையின் தற்கொலைப் படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி அமைந்தது முதல், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

நிகழாண்டு (2025) துவங்கியது முதல் பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 290 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.