முகப்பு
உலகம்

'பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும்'

வங்கதேச ராணுவ முன்னாள் தலைவரின் கருத்து பற்றி...

Updated On : 2 மே, 2025 at 1:05 PM
முகம்மது யூனுஸுடன் ஃபஸ்லுர் ரஹ்மான் - X
பகிர்:

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசும், அதேபோல இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு இடையே பதற்றம் நிலவியது.

மேலும் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்குச் சென்ற முகமது யூனுஸ், 'இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி, அவை கடல் பகுதியை அடைய முடியாது. கடலுக்கு பாதுகாப்பாக வங்கதேசம்தான் உள்ளது' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.