நேபாளத்தில் 18வது குடியரசு நாள்: மன்னராட்சி ஆதரவாளர்கள் பேரணி!
நேபாளத்தின் 18வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டுள்ளதைப் பற்றி...
நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்களின் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் இடையே அந்நாட்டு அரசு 18வது குடியரசு நாளைக் கொண்டாடியுள்ளது.
நேபாள நாட்டில், இன்று (மே 28) 18-வது குடியரசு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அந்நாட்டின் ராஷ்டிரிய பிரஜதந்திரா கட்சியின் (ஆர்பிபி) தலைமையிலான மன்னராட்சி ஆதரவாளர்கள் போராட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்நாட்டை ஆளும் சிபிஎன் - யூஎம்எல் கூட்டணி அரசு, வன்முறைகளைத் தவிர்க்க ரத்னாபார்க் மற்றும் பிரிகுதிமண்டபம் ஆகிய பகுதிகளில், சுமார் 6,000 பாதுகாப்புப் படையினரைக் குவித்து அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
Advertisement
இந்நிலையில், அரசு சார்பில் பிரிகுத்மண்டபம் பகுதியில் நடைபெற்ற குடியரசு நாள் நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் பாரம்பரிய மற்றும் கலாசார ரீதியான ஆடைகளை அணிந்து கலந்துக்கொண்டனர்.
இதேவேளையில், தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி கட்சியின் முக்கிய தலைவர்கள், நேபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்திராவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்து நேபாளத்தை ஹிந்து நாடாக உருமாற்ற வலியுறுத்தி பேரணியாகச் சென்றனர்.
மதியம் 2 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் அந்நகரத்தின் பல்வேறு பகுதிகளின் வழியாகச் சென்று, குடியரசு ஆட்சிக்கும், அரசுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இருப்பினும், நேபாளத்தின் பல்வேறு இடங்களில் 18வது குடியரசு நாள் மிகவும் விமர்சையாகவே கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராமச்சந்திரா பௌதேல், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் துண்டிகேல் திறந்தவெளி மைதானத்திலுள்ள ராணுவ அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு மே 28 ஆம் தேதியன்று அந்நாட்டின் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கொண்டு வரப்பட்டு நேபாளம் குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!