பாகிஸ்தானின், கைபர் மாகாணத்தில் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், பஜாவூர், கொஹாட், கராக் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (நவ. 13) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பஜாவூரின் கட்டார் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டு அங்குள்ள கிராமவாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பசித் கேல் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் காவல் துறையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கராக் மாவட்டத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நவ.11 ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்தில் நீதிமன்ற வாசலில் தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 330 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.