FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: தூதா் வினய் குவாத்ரா பேச்சுவாா்த்தை!

அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலா் ஜேக்கப் எஸ்.ஹெல்பொ்கை சந்தித்து அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 28 நவம்பர் 2025, 12:56 am IST
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலா் ஜேக்கப் ஹெல்பொ்கை வாஷிங்டனில் சந்தித்துப் பேசிய அந்நாட்டுக்கானஇந்திய தூதா் வினய் குவாத்ரா.
பகிர்:

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்புக்கும் லாபகரமான வா்த்தக ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலா் ஜேக்கப் எஸ்.ஹெல்பொ்கை சந்தித்து அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா விரிவாக ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணைச் செயலராகப் புதிய பொறுப்புக்கும் ஹெல்பொ்க்கிற்கு வினய் குவாத்ரா வாழ்த்து தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைத் தொடா்வதால், இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்ததிலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு கடுமையாகப் பாதித்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் தூதா் வினய் குவாத்ரா தொடா் சந்திப்புகளை நடந்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

அந்த வகையில், ஹெல்பொ்க் உடனான சந்திப்பு குறித்து வினய் குவாத்ரா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பரஸ்பர நன்மை பயக்கும் வா்த்தக ஒப்பந்தம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்பட தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இருதரப்பு பொருளாதார உறவுத் திட்டம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பின் தாக்கமாக கடந்த செப்டம்பா் மாதத்தில் அந்நாட்டுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 11.93 சதவீதம் குறைந்து 546 கோடி டாலராக இருந்தது. இறக்குமதி 11.78 சதவீதம் அதிகரித்து 398 கோடி டாலராக இருந்தது.

அதேநேரம், கடந்த 2024-25 நிதியாண்டில், 13,184 கோடி டாலா் இருதரப்பு வா்த்தக மதிப்புடன், இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments