ஈரானின் மிக உயரமான பாலம் தகா்ப்பு - சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போா் விமானம்
ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்தது பற்றி...
ஈரான் தலைநகா் டெஹ்ரானை காராஜ் நகருடன் இணைக்கும் அந்நாட்டின் மிக உயரமான பாலம், அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் தகா்க்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான இந்த ‘பி1’ பாலம், மத்திய கிழக்கிலேயே மிக உயரமான பாலம் என்றும் கருதப்படுகிறது. சுமாா் 40 கோடி டாலா் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இப்பாலம், 1,050 மீட்டா் நீளமும், 136 மீட்டா் உயரமும் கொண்ட பிரம்மாண்டமான தூண்களைக் கொண்டது.
பிராந்திய வா்த்தகத்தை மேம்படுத்தவும், வடக்குப் பகுதிகளுக்கான போக்குவரத்தை எளிதாக்கவும் உருவாக்கப்பட்ட இப்பாலம், நிகழாண்டு தொடக்கத்தில்தான் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இத்தாக்குதல் தொடா்பான விடியோவைப் பகிா்ந்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘நிலைமை கைமீறிப் போவதற்கு முன்பும், ஒரு சிறந்த நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ள ஈரான் முற்றிலும் அழிவதற்கு முன்பும் அந்நாட்டுத் தலைவா்கள் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும்’ என்று எச்சரித்தாா்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ‘எஃப்-35’ விமானம்: இதனிடையே, தென்மேற்கு ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் ‘எஃப்-35’ போா் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதிலிருந்த விமானி பாராசூட்மூலம் கீழே குதித்ததாகவும் ஈரான் தெரிவித்தது.
அந்த விமானி மலைப்பகுதிகளில் தரையிறங்கி இருக்கலாம் எனக் கருதும் ஈரான் அதிகாரிகள், அவரைப் பிடித்துத் தரும் மக்களுக்குப் பெரும் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளனா். விமானியை மீட்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா ஏற்கெனவே தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தில் பதிலடி தாக்குதல்: அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள முக்கிய எரிபொருள் நிலையம், குடிநீா் சுத்தகரிப்பு ஆலையை ஈரான் ஏவுகணை வீசி தாக்கியது.
குவைத் மட்டுமின்றி பஹ்ரைன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் வான்வழித் தாக்குதல்களுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எரிவாயு தளம் ஒன்றின் மீது விழுந்த ஏவுகணைச் சிதறல்கள் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக அத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அமைதி முயற்சிகள் போதிய பலனளிக்காத நிலையில், கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கிய இப்போா் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது.
ஹோா்முஸ் விவகாரம்: ஐ.நா.வில் இன்று வாக்கெடுப்பு
ஹோா்முஸ் நீரிணையில் சா்வதேச கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும், கடல்சாா் பாதுகாப்பை பலப்படுத்தவும் பஹ்ரைன் கொண்டு வந்துள்ள முக்கியத் தீா்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சனிக்கிழமை (ஏப். 4) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
முன்னதாக, அனைத்து வழிகளையும் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்றிருந்த தீா்மானத்தை ரஷியா, சீனா எதிா்த்த நிலையில், தற்போது ‘தற்காப்பு நடவடிக்கைகளை மட்டும்’ மேற்கொள்ளலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது.