ஈரானில் இரு நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற பி1 பாலத்தை தகர்த்த அமெரிக்கா!
ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்தது பற்றி...
ஈரான் கராஜ் நகரை தெஹ்ரானுடன் இணைக்கும் மிகப்பெரிய பி1 பாலத்தை தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து வருகின்றது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த ஈரான், போர் பாதிப்புக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மிக உயரமானப் பாலமாகவும் ஈரானின் பொறியியல் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் கராஜை தலைநகர் தெஹ்ரானுடன் இணைக்கும் பி1 பாலத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காணொலியை வெளியிட்டு டிரம்ப் தெரிவித்ததாவது, “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுகிறது, இனி அது ஒருபோதும் பயன்பாட்டுக்கு வராது. இதுபோன்ற பல நிகழ்வுகள் தொடரவுள்ளன. ஒருவேளை எதிர்காலத்தில் மாபெரும் நாடாக உருவெடுக்கக்கூடிய ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தும் அழிந்துபோவதற்கு முன்பாக, தாமதப்படுத்தாமல் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கான நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 8 பேர் பலியானதாகவும், 95 பேர் காயமடைந்ததாகவும் அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது.