குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் எலி விஷம் கலந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ’ஹிப்’ என்கிற தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பார் எனப்படும் பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட 5 மாதக் குழந்தைகளுக்கான கேரட் மற்றும் உருளைக்கிழங்கு கலந்து தயாரிக்கப்படும்190 கிராம் கொண்ட ஹிப் நிறுவன உணவு ஜாடிகளில் எலி விஷம் கலந்திருப்பதாக சனிக்கிழமை (ஏப்ரல் 18) செய்த சோதனையில் தெரிய வந்தது.
இதுபற்றி ஹிப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தயாரிப்பு மற்றும் தரக் குறைபாடு காரணமாக நாங்கள் உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறவில்லை. எங்கள் தரப்பிலிருந்து பொருள்களை அனுப்புகையில் அவை நல்ல நிலையில் அனுப்பப்பட்டன. குற்றச் சம்பவம் காரணமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டனர்.
Advertisement
இதனை, வாடிக்கையாளர்கள் எவரேனும் வாங்கியிருந்தால் அவற்றைப் பயன்படுத்தும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் பற்றி ஆஸ்திரியாவின் பர்கன்லாந்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், குறிப்பிட்ட ஜாடிகளின் அடிப்பகுதியில் சிவப்பு வட்டத்துடன் கூடிய வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என்றும், அதனைத் திறக்கையில் வழக்கத்திற்கு மாறான கெட்டுப்போன வாசனை வீசும் என்றும், ஜாடியை முதன்முதலில் திறக்கும்போது வரவேண்டிய ‘டப்’ என்ற சத்தம் வராமல் போனாலும் அதனைக் கடைகளில் திரும்ப வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பார் பல்பொருள் அங்காடிகளின் பல்வேறு கிளைகளான ஸ்பார், யூரோஸ்பார், இண்டர்ஸ்பார் மற்றும் மேக்ஸிமார்க் போன்ற கடைகளில் விற்கப்பட்ட ஹிப் உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ரசீது இல்லாமல் வாடிக்கையாளர்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என்று ஹிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து குழந்தைகள் உணவுப் பொருள்களின் விற்பனையையும் ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசில் உள்ள விற்பனையாளர்கள் நிறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரிய சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, எலி விஷத்தை உட்கொண்டால் ஈறுகள் மற்றும் மூக்கில் இரத்தக் கசிவு, மலத்தில் இரத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் அதனை உட்கொண்டு 2 முதல் 5 நாள்களில் இந்த அறிகுறிகள் உடலில் ஏற்படும். ஆனால், குழந்தைகள் இதனை உட்கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.