முகப்பு
உலகம்

வங்கதேசத்தின் பிரதமராகும் ’டார்க் பிரின்ஸ்’! யார் இந்த தாரிக் ரஹ்மான்!

வங்கதேசத்தின் பிரதமராகவுள்ள தாரிக் ரஹ்மான் பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:16 AM
தாரிக் ரஹ்மான் - AP
பகிர்:

வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.

வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (வயது 60) தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது.

300 தொகுதிகளைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், வேட்பாளா் ஒருவரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 212 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று பிஎன்பி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

யார் இந்த தாரிக் ரஹ்மான்?

பிஎன்பி கட்சியின் நிறுவனர் ஜியாவுர் ரஹ்மானின் மகன்தான் தாரிக் ரஹ்மான் ஆவார். ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மான், 1971 ஆம் ஆண்டு மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1981 ஆம் ஆண்டில் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா கட்சிப் பொறுப்பையும் பிரதமர் பதவியையும் ஏற்றார்.

பெண் ஒருவர் பொதுவெளியில் வருவதற்கே கடும் எதிர்ப்புகள் இருந்த காலகட்டத்தில், கலீதா ஜியாவை பிரதமராக்க அவரது மகன் தாரிக் ரஹ்மான் உறுதுணையாக இருந்தார்.

1991 - 1996 மற்றும் 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் கலீதா ஜியா பிரதமராகப் பதவி வகித்தபோது, முக்கிய முடிவுகள் அனைத்தையும் தாரிக் ரஹ்மானே எடுத்தார். நிழல் பிரதமராக வலம்வந்த தாரிக் ரஹ்மானை ‘டார்க் பிரின்ஸ்’ என்று வங்கதேச அரசியல் கட்சிகள் அழைத்தன.

2007 ஆம் ஆண்டு ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மானை கைது செய்தது.

சுமார் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாரிக் ரஹ்மான், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றார்.

பின்னர், பிரிட்டனிலேயே தஞ்சமடைந்த தாரிக் ரஹ்மா, கடந்த 2025 டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோதுதான் வங்கதேசம் திரும்பினார்.

தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் தாரிக் ரஹ்மான்.

வங்கதேச தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டிய தாரிக் ரஹ்மான், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவேன் என்றும், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

முக்கிய வாக்குறுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம்கள், ஹிந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தேசத்தை உருவாக்க தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில், மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

விரைவில் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்.

summary

The 'Dark Prince' who will become the Prime Minister of Bangladesh! Who is this Tariq Rahman?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.