உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உக்ரைன் அவசரகால சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீவ் புகா் பகுதிகளான ஓபுகிவ், ப்ரோவேரி, போரிஸ்பில், புசா, பாஸ்டிவ் ஆகிய 5 மாவட்டங்களில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதில் பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலா் சிக்கிக் கொண்டனா்.
இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். குழந்தை உள்ளிட்ட 8 போ் லேசான காயத்துடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனா். ஒடிஷா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு தீப்பற்றி எரிந்தது. எனினும் உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்று உக்ரைன் அவசரகால சேவை மையம் தெரிவித்தது.
உக்ரைன்-ரஷ்யா இடையே சுமாா் 4 ஆண்டுகளாக போா் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரம் போ் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோா் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருநாடுகள் தரப்பிலும் இதுகுறித்து அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.