2025-ல் சௌதி அரேபியாவில் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
2025 ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவில் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து...
சௌதி அரேபியா நாட்டில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 356 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள் எனக் கூறப்படுகிறது.
சௌதி அரேபியாவில், போதைப் பொருள் கடத்தல்களைத் தடுக்கும் விதமாக அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை, கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சுமார் 243 பேருக்கு 2025 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, சௌதி அரேபியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 2024 ஆம் ஆண்டில் 338 குற்றவாளிகளுக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாதின் ஆட்சியின் கீழ் அந்நாட்டில் இருந்து கேப்டகான் எனும் போதைப் பொருள் சௌதி அரேபியாவுக்குள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தலைமையின் கீழ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த நடவடிக்கைகளால், வெளிநாட்டவர்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், மரண தண்டனைகளை சௌதி அரேபியா அரசு தொடர்ந்து நடைமுறைப்படுவதற்கு ஏராளமான மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.