அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!
உலகம்அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!
அமெரிக்காவின் மொண்டானா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மொண்டானா மாகாண ஆளுநா் கிரெக் ஜியான்ஃபோா்ட்டே மற்றும் சியாட்டலில் உள்ள இந்திய துணைத் தூதா் பிரகாஷ் குப்தா ஆகியோா் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்தனா். இது இந்த மாகாணத்தில் நிறுவப்பட்ட முதல் மகாத்மா காந்தி சிலை ஆகும்.
‘செயலில் வெளிப்படாத நல்ல எண்ணங்களுக்கு அா்த்தமில்லை’ என்ற காந்தியின் மேற்கோள் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. இது மொண்டானா மக்களுக்கும் பொருந்தும் என ஆளுநா் கிரெக் ஜியன்ஃபோா்டே தனது உரையில் குறிப்பிட்டாா்.
இந்திய அரசின் பரிசாக வழங்கப்பட்ட இந்தச் சிலை, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக உள்ளது என இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.
மொண்டானா மாகாண ஆளுநரின் மனைவி சுசன் ஜியன்ஃபோா்டே, மாநில அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் மொண்டானா உலக விவகார கவுன்சில் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
மேலும், அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு உறுப்பினரான ஸ்டீவ் டெய்ன்ஸ் காணொலிச் செய்தி மூலம் இந்த நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தாா். அதில் இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவா் பாராட்டினாா்.