உண்மையை மறைக்க டிரம்ப் முயற்சி? ஈரானில் 165 சிறுமிகள் பலிக்கு அமெரிக்காவே காரணம்: ஆதாரம் வெளியானது!
ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!
ஈரானில் மகளிர் பள்ளி மீது அமெரிக்க படைகளே தாக்குதல் நடத்தின என்பதை நிரூபிக்க முக்கிய விடியோ ஆதாரம் வெளியானது. இந்தத் தாக்குதலைக் குறித்து விசாரணை செய்யும் புலனாய்வு அமைப்பான ‘பெலிங்காஸ்ட்’ இதனை உறுதிபடுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த பிப். 28, தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இதனிடையே, ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகள் ‘தோமாஹாக்’ ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு ராணுவம் வெளிப்படையாக தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், ஈரானில் தாக்கப்பட்ட பள்ளியில் விழுந்த ஏவுகணைகள் ‘தோமாஹாக்’ ஏவுகணைகள் என்பதை பிப். 28-இல் தாக்குதல் நடத்தப்பட்டபோது பதிவான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக ‘பெல்லிங்காஸ்ட்’ வெளியிட்ட விடியோவில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா என்ற குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட விடியோ ஆதாரம் கூடுதல் தரவாக அமைந்துள்ளது.