பலியான ஈரான் மாலுமிகள் 45 பேரின் உடல்களை ஒப்படைத்த இலங்கை!
அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் பலியான ஈரான் மாலுமிகள் பற்றி...
அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் பலியான 45 ஈரான் மாலுமிகளின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை ஒப்படைத்தது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஈரான் மாலுமிகள் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு ஐரிஸ் டெனா என்ற கப்பலில் ஈரான் திரும்புகையில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் எல்லைக்கு அப்பால் கடந்த மார்ச் 4 அன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கப்பலில் இருந்த 180 கப்பல் ஊழியர்கள் நீரில் மூழ்கினர்.
கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கையிடம் உதவி கோரிய நிலையில், இலங்கை கடற்படையினர் 32 மாலுமிகளை உயிருடன் மீட்டனர். மீதமுள்ளவர்களில் 84 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இதில், 45 பேரின் உடல்கள் மத்தளா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும் என இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
போர் நடைபெறுவதால் நிலைமை சீரடையும் வரை பலியானோரின் உடல்களை இலங்கையில் வைத்திருப்பதாகவும், பின்னர் அவற்றை தாய்நாட்டிற்கு கொண்டு செல்லவும் இலங்கை அரசு முன்னரே கூறியிருந்தது. மருத்துவமனையின் பிணவறை எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் அவற்றை தற்காலிக குளிர்பதன பெட்டியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்பிழைத்த மாலுமிகள் இலங்கை கோகல்லேவில் உள்ள விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.