போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்
அமெரிக்காவுடன் கைகோக்கும் பிற நாட்டுக் கடற்படைகள் - டிரம்ப்
அமெரிக்காவுடன் இணைந்து பிற நாட்டுக் கடற்படைகள் ஈரானுக்கு எதிராகப் போர்க் கப்பல்களை அனுப்ப ஆயத்தமாகியுள்ளன. விரைவில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(மார்ச் 14) தெரிவித்தார்.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், அந்த வழியாக கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. அப்ப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன.
இந்தியாவுக்கு முக்கிய எரிவாயு விநியோகஸ்தரான கத்தாரும், இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், விரைவில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று இன்று(மார்ச் 14) தமது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ‘பல நாடுகள், அதிலும் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் நேர்கோட்டில் செயல்படும் விதமாக போர்க்கப்பல்களை அனுப்பவிருக்கின்றன. அதன்மூலம், ஹோர்முஸ் நீரிணையை திறக்கவும் பாதுகாக்கவும் ஆயத்தமாகியுள்ளன.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிறர் அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பும் என்று நம்பிக்கை உள்ளது. அதன்மூலம், ஹோர்முஸ் நீரிணை பகுதி எந்தவொரு நாட்டாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படாது என்ற நிலைமை ஏற்படும்.
எவ்வழியிலாவது நாங்கள் விரைவில் ஹோர்முஸ் நீரிணையை திறப்போம், பாதுகாப்பான பகுதியாக மாற்றுவோம்!’ என்று தெரிவித்துள்ளார்.