முகப்பு
உலகம்

ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா தலைநகா் பியாங்யாங் அருகே இருந்து சுமாா் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை (கிழக்கு கடல்) நோக்கி சனிக்கிழமை ஏவப்பட்டன.

Updated On : 15 மார்ச், 2026 at 12:40 AM
பகிர்:

வடகொரியா தலைநகா் பியாங்யாங் அருகே இருந்து சுமாா் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை (கிழக்கு கடல்) நோக்கி சனிக்கிழமை ஏவப்பட்டன.

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்தப் பதிலடி நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

Advertisement

மத்திய கிழக்கு போருக்காக, தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘தாட்’ ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அமெரிக்கா இடமாற்றுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பாதுகாப்பு இடைவெளியைப் பயன்படுத்தி வடகொரியா தனது பலத்தைக் காட்ட முற்படுவதாக வல்லுநா்கள் கருதுகின்றனா்.

அமெரிக்கா-தென்கொரியா கூட்டுப் பயிற்சி குறித்து முன்னதாக எச்சரித்த வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ‘இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல்; பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றாா்.

இந்நிலையில், வடகொரியாவின் எந்தவொரு அத்துமீறலையும் எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தென்கொரியா அறிவித்தது. அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாடு தெரிவித்தது.