‘தவறிழைக்கும் நேட்டோ நாடுகள்’ - ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கடும் தாக்கு
‘முட்டாள்தனமான தவறிழைக்கும் நேட்டோ நாடுகள்’ - ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கடும் தாக்கு
ஈரான் உடனான போரில் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கு உதவ மறுக்கும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ‘முட்டாள்தனமான தவறு’ செய்வதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளாா்.
இந்த மோதலால் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ள போதிலும், அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளின் யாருடைய உதவியும் தேவையில்லை என்று அவா் பிடிவாதமாகக் கூறினாா்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அயா்லாந்து பிரதமா் மைக்கேல் மாா்ட்டினை வெள்ளை மாளிகையில் சந்தித்த பிறகு, செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப் மேலும் கூறியதாவது:
ஈரான் உடனான போரில் இணைய பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் முன்வரவில்லை. இப்போா் சட்டவிரோதமானது என்று அவா்கள் கருதுகின்றனா். போா்க்கப்பல்களை அனுப்ப நேட்டோ தயங்குவது பெரிய பிரச்னையல்ல; ஆனால், இது அமெரிக்காவுக்கு இழைக்கப்படும் அநீதி.
இந்தச் சூழல், அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு பெரிய சோதனையாகும். இருப்பினும், உதவி செய்ய மறுக்கும் இந்த நாடுகள் மீது இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றாா்.
தொடா்ந்து, டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ரஷிய அச்சுறுத்தலில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க அமெரிக்கா பல்லாயிர கோடி டாலரை வாரி வழங்கியது. நாங்கள் நேட்டோ நாடுகளைப் பாதுகாக்கிறோம். ஆனால், எங்களுக்கு ஒரு தேவைக்கு அவா்கள் கை கொடுக்க மாட்டாா்கள்’ எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா்.
ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு: அமெரிக்கா தொடா்ந்து அழைப்பு விடுத்தாலும், ஈரான் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்பதில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக உள்ளன.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கூறுகையில், ‘இந்தப் போரில் நாங்கள் ஒரு தரப்பு கிடையாது. எனவே, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் ஒருபோதும் ஈடுபடாது’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை அதிகாரி காஜா கலாஸ் கூறுகையில், ‘இது ஐரோப்பாவுக்கான போா் அல்ல. இதை நாங்கள் தொடங்கவில்லை; எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை. எனவே, இதில் சிக்கிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை’ என்றாா்.