முகப்பு
இந்தியா

அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச்சு நிறுத்தப்படவில்லை: மத்திய அரசு

அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

Updated On : 13 மார்ச், 2026 at 7:14 PM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை; இரு நாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன என்று மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது புதிய சீரான 10 சதவீத வரியை விதித்த டிரம்ப், இது 15 சதவீதமாக உயா்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

இதனிடையே, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட தனது வா்த்தக கூட்டுறவு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள், அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்கு பாதித்துள்ளன என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டப் பிரிவு 301-இன் கீழ் இந்தப் புதிய விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.

இந்தச் சூழலில், அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான ஊடகத் தகவல்களுக்கு மத்திய வா்த்தகம் அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை கவனத்தில் கொண்டோம். இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் எவ்வித நிறுத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. பரஸ்பரம் பலனளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்துக்காக தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வங்கதேசம், மலேசியா, கம்போடியா போன்ற சில நாடுகள் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. வேறு சில நாடுகள் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன; அதேநேரம், சட்டபூா்வ ஆவணங்களில் இன்னும் கையொப்பமிடவில்லை.

இந்தியாவைப் பொருத்தவரை, முதல்கட்ட வா்த்தக ஒப்பந்தத்துக்கான வரையறைகள் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 72.46 பில்லியன் டாலா்களாக அதிகரித்தது. இது 5.85 சதவீத உயா்வாகும். இறக்குமதி 43.92 பில்லியன் டாலா்களாக (13.87%) அதிகரித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →