ஈரான் மீதான தாக்குதல்களை அதிகரிப்போம்: இஸ்ரேல் அச்சுறுத்தல்!
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசியது பற்றி...
ஈரான் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுப்புவதாகக் கூறியிருந்த நிலையில் உலகளாவிய சுற்றுலா தளங்களை தாக்கவிருப்பதாக ஈரான் மிரட்டியது. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்தார்.
எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர், எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெய் பீப்பாய்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர், “ஈரான் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவோம்” என இன்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தற்போதைய போர்ச்சூழலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போர் முடிவதற்கான சூழல் இப்போது இல்லை என்பது தெரிய வருகிறது.
முன்னதாக, இன்று ஈரானின் நடான்ஸ் அனுசக்தி செறிவூட்டல் மையத்தின் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஈரான், தாக்குதலில் இதுவரை எந்தவித அணுக்கசிவும் ஏற்படவில்லை என்று அறிவித்தனர்.
இந்தப் போரில் இதுவரை அதிகபட்சமாக ஈரானில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, லெபனானில் 1,000 பேர், 15 இஸ்ரேலியர்கள் மற்றும் 13 அமெரிக்க ராணுவப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லெபனான் மற்றும் ஈரானில் பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.