நடிகர் விக்ரம் தற்போது மகான் மற்றும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதில் மகான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மகான் படத்தில் தனது மகன் துருவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் பழம்பெரும் பாடகி பி.சுசீலாவை நடிகர் விக்ரம் சமீபத்தில் அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து பாடகி பி.சசீலாவின் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அக்டோபர் மாதம் ஒரு நாள் சுஷீலாம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்தது . நடிகர் விக்ரமின் மேலாளர் பேசினார். விக்ரம் அம்மாவின் பெரிய விசிறி என்றும் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அடுத்த நாள் மாலை வரலாம் என்று அம்மா கூறினார்கள்.
அம்மாவை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம், பயம் கலந்த மரியாதை ஒரு பக்கம் என விக்ரம் சிறிது நேரம் கனவுலகில் இருந்தார் என்றால் மிகையாகாது . அம்மா அத்தனை சகஜமாக பழகுவார் என்று எதிர் பார்க்கவில்லை. அவரின் பாடல்கள் போலவே அவர்களின் பேச்சும் அத்தனை இனிமையாக இருக்கிறதே என்று வியந்தார். அம்மாவிடம் பல பாடல்கள் பற்றி பேசினார். அம்மா சில பாடல்கள் பாட அவரும் உடன் பாடினார்.
இன்றைய முன்னணி கதாநாயகர் விக்ரம் இத்தனை பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. பத்து நிமிடம் அம்மாவை பார்த்து விட்டு போகலாமென வந்தவர் 2 மணிநேரம் பேசிகக்கொண்டிருந்து விட்டு மனமில்லாமல் அவசர வேலையாய் கிளம்பி சென்றார். என் வாழ்க்கை கனவு நனவானது என்றும் அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி என்றும் கூறி விட்டு சென்றார்.
அம்மாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அடிக்கடி வருகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார். நல்ல ஒரு மாலை பொழுதை எங்களுக்கு அளித்த விக்ரம் அவர்களுக்கு நன்றி. இத்தனை உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு முன்னணி நடிகர், இவ்வளவு எளிமையாக இருப்பது அபூர்வம். நன்றி விக்ரம்!! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.